கடலூரில் ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டில் ரூ.3 லட்சம் நகை கொள்ளை
கடலூர்:
கடலூர் செல்லாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மாலதி (வயது 47). தனியார் ஆஸ்பத்திரியில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
கிறிஸ்துமஸ் விடுமுறை தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல மாலதி முடிவு செய்தார். அதன்படி அவர் தனது வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து அதன் வழியாக உள்ளே புகுந்தனர். பூட்டியிருந்த பீரோவை திறந்தனர். அதில் இருந்த 13 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். கொள்ளை போன நகைகளின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.
இந்த நிலையில் சென்னைக்கு சென்றிருந்த மாலதி இன்று காலை தனது வீட்டுக்கு வந்தார். வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பீரோவின் உள்ளே பார்த்த போது அங்கிருந்த நகைகளை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். தடயங்கள் ஏதும் கிடைக்கிறதா? என சோதனை செய்தனர்.
கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.