செய்திகள்

புதுவை அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதல் - பெண் பலி

Published On 2017-12-25 15:49 IST   |   Update On 2017-12-25 15:49:00 IST
புதுவை அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் கணவன் கண் எதிரே பெண் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
புதுச்சேரி:

புதுவையை அடுத்த தமிழக பகுதியான சின்ன கோட்டகுப்பத்தை சேர்ந்தவர் மாரியப்ப கவுண்டர் (வயது 55). இவரது மனைவி சாந்தி (50). கணவன்- மனைவி இருவரும் இன்று காலை மரக்காணத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

பெரிய முதலியார் சாவடி அருகே சென்ற போது, முன்னாள் சென்ற டிராக்டரை மாரியப்ப கவுண்டர் முந்திச் செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியது. இதில் நிலை தடுமாறி கணவன் - மனைவி இருவரும் கீழே விழுந்தனர்.

அப்போது டிராக்டர் சக்கரம் சாந்தியின் மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே சாந்தி பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கோட்டகுப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கணவன் கண் எதிரே மனைவி உடல் நசுங்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News