செய்திகள்

இளம்பெண்ணை எரித்துக் கொன்ற வழக்கில் பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரிப்பு

Published On 2017-11-28 23:36 GMT   |   Update On 2017-11-28 23:36 GMT
ஆதம்பாக்கத்தில் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த இளம்பெண்ணின் தாயார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
சென்னை:

ஆதம்பாக்கத்தில் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த இளம்பெண்ணின் தாயார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

ஆதம்பாக்கம் சரஸ்வதி நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ரேணுகா. இவர்களது மகள்கள் இந்துஜா (21), நிவேதா (20), மகன் மனோஜ்.

பட்டதாரி பெண் இந்துஜாவை வேளச்சேரியை சேர்ந்த ஆகாஷ் (22) காதலித்தார். ஆனால் இந்த காதலை பெற்றோர் ஏற்கவில்லை. காதலை கைவிடும் படி அறிவுறுத்தியதால், மனம் மாறிய இந்துஜா ஆகாஷை கைவிட்டார். ஆனாலும் ஆகாஷ் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்தார். இதனால் எரிச்சல் அடைந்த இந்துஜா ஆகாஷை கண்டித்தார்.

இதற்கிடையே, கடந்த 14-ம் தேதி இரவு 9 மணியளவில் இந்துஜா வீட்டுக்கு சென்ற ஆகாஷ், அவர்களிடம் இந்துஜாவை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டார். ஆனால் அவர்கள் மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. தான் கொண்டு வந்திருந்த டர்பன் டைன் ஆயிலை வீட்டிலிருந்த அனைவர் மீதும் ஆகாஷ் ஊற்றினார்.

யாரையும் வீட்டை விட்டு வெளியே விடாமல் அனைவர் மீதும் டர்பன் டைனை வீசினார். பின்னர் கையில் இருந்த லைட்டரால் தீயை கொளுத்தினார். இதில் இந்துஜா உடல் வெந்து பரிதாபமாக அங்கேயே இறந்து போனார். உயிருக்கு போராடிய தாய் ரேணுகா, தங்கை நிவேதா ஆகியோரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தகவலறிந்து சென்ற ஆதம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். ஆகாஷையும் கைது செய்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிந்துஜாவின் தாய் ரேணுகா, நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, இளம்பெண்ணை எரித்துக் கொன்ற வழக்கில் பலியானவர்களின் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. இந்துஜாவின் தங்கை நிவேதா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News