செய்திகள்

பண்ருட்டி அருகே லாரி-பள்ளி வேன் மோதல்: 10 மாணவர்கள் படுகாயம்

Published On 2017-11-27 16:19 IST   |   Update On 2017-11-27 16:19:00 IST
பண்ருட்டி அருகே லாரி மற்றும் பள்ளி வேன் மோதிய விபத்தில் 10 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பண்ருட்டி:

பண்ருட்டி அருகே உள்ள கொள்ளுக்காரன்குட்டையில் தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் வேன் டிரைவராக மேலிருப்பு பகுதியை சேர்ந்த தமிழ்மாறன் (வயது 27) என்பவர் உள்ளார்.

இவர் மேலிருப்பு பகுதியில் உள்ள மாணவ- மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வருவதற்காக இன்று காலை வேனில் புறப்பட்டார். பின்னர் 30 மாணவ-மாணவிகளை ஏற்றிக் கொண்டு அதே வேனில் பள்ளி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அந்த வேன் காடாம்புலியூர் அருகே பண்ருட்டி- கும்பகோணம் சாலையில் வந்து கொண்டிருந்தது. முன்னால் ஒரு கார் மற்றும் பஸ், லாரி ஆகியவையும் சென்று கொண்டிருந்தன.

அப்போது கார் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதனால் பின்னால் வந்து கொண்டிருந்த பஸ், லாரி மற்றும் பள்ளி வேன் ஒன்றன் பின் ஒன்றாக பின்னால் மோதி கொண்டன.

இந்த விபத்தால் மோதிய அனைத்து வாகனங்களின் கண்ணாடிகளும் நொறுங்கின. பள்ளி வேனை ஓட்டி வந்த டிரைவர் தமிழ்மாறன் மற்றும் வேனில் இருந்த ஆத்திரிகுப்பத்தைச் சேர்ந்த ஷாலினி (13), மேலிருப்பு பகுதியை சேர்ந்த தேவராஜ் (11), சதீஷ்குமார் (11), கோபிநாத் (12) உள்பட 10 மாணவ-மாணவிகள் பலத்த காயம் அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரய்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்துகளால் பண்ருட்டி- கும்பகோணம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்கு வரத்தை சரி செய்தனர்.

இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண்ருட்டி- கும்பகோணம் சாலையில் விபத்துக்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே அந்த சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.

Similar News