செய்திகள்

புதுவை அருகே ஒரே நாளில் 12 கடைகளில் கொள்ளை

Published On 2017-11-25 11:36 GMT   |   Update On 2017-11-25 11:36 GMT
புதுவை அருகே ஒரே நாளில் 12 கடைகளில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மரக்காணம்:

புதுவை அருகே காலாப்பட்டை அடுத்த கூனிமேடு பகுதியை சேர்ந்தவர் காத்தவராயன் (வயது 28). இவர் அதே பகுதியில் கம்ப்யூட்டர் பழுது பார்க்கும் மற்றும் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

நேற்று இரவு காத்தவராயன் வழக்கம் போல் தனது வேலைகளை முடித்த பின்னர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு புறப்பட்டார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இன்று அதிகாலை ஒரு மோட்டார்சைக்கிளில் அந்த கடைக்கு வந்தனர். பின்னர் அந்த கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர் பின்பு கடையில் இருந்த 6 லேப்-டாப்களை திருடினர்.

அந்த லேப்-டாப்களை பையில் வைத்து கொண்டு வெளியே வந்தனர்.காத்தவராயன் கடைக்கு பக்கத்தில் உள்ள கார்த்திக் என்பவருக்கு சொந்தமான போட்டோ ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

அங்கு இருந்த 2 கேமராக்களையும் திருடினர்.பின்னர் அந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கடைகளின் பூட்டை உடைத்து திருட முயன்றனர். ஆனால் அதில் பொருட்கள் ஏதும் கிடைக்காததால் கார்த்திக் மற்றும் காத்தவராயன் கடையில் கொள்ளையடித்த பொருட்களுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். கூனிமேடு வி.ஏ.ஓ. அலுவலகம் பின்புறம் மர்ம நபர்கள் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் மரக்காணம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் பயந்து போன மர்ம நபர்கள் அவர்கள் வந்த மோட்டார்சைக்கிளையும் கொள்ளையடித்த பொருட்களையும் அங்கேயேபோட்டு விட்டு தப்பி சென்று விட்டனர்.

போலீசார் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களின் செய்கையை பார்த்து சந்தேகம் அடைந்தனர். அவர்களை பிடிக்க முயன்றனர்.ஆனால் அந்த மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர்.

போலீசார் கொள்ளையர்கள் போட்டு சென்ற பொருட்கள் மற்றும் மோட்டார்சைக்கிளை கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மரக்காணத்தை அடுத்துள்ள கூனிமேடு பகுதியில் உள்ள கடைகளை உடைத்து மர்ம நபர்கள் பொருட்களை கொள்ளையடித்து இருப்பதும், போலீசாரை கண்டதும் அந்த பொருட்களை போட்டு சென்றிருப்பதும் தெரிய வந்தது. இந்த பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1லட்சம் ஆகும்.

இதேபோல் மரக்காணம் பக்கம் தாழங்காட்டில் உள்ள 2 கடைகளை உடைத்து மர்ம நபர்கள் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற கொள்ளையர்களை வலை வீசி தேடிவருகின்றனர்.

ஒரே நாள் இரவில் மரக்காணம் பகுதியில் 12 கடைகளில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News