செய்திகள்

விருத்தாசலம் பகுதியில் ஒரே நாளில் 3 கோவில்களில் ரூ.5 லட்சம் நகை-பணம் கொள்ளை

Published On 2017-11-22 12:16 GMT   |   Update On 2017-11-22 12:16 GMT
விருத்தாசலம் பகுதியில் ஒரே நாளில் 3 கோவில்களில் ரூ.5 லட்சம் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ரெட்டிக்குப்பம் கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி உடனுறை சீனுவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடுகள் முடிந்த பின் பூசாரி ராஜேந்திரன் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றார்.

நள்ளிரவில் மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு மூலஸ்தானத்தில் உள்ள அம்மன் கழுத்தில் இருந்த 2 பவுன் தாலி மற்றும் உற்சவர் அம்மன் சிலையிலிருந்த 2 பவுன் தாலி ஆகியவற்றையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.

பின்னர் அங்கிருந்த உண்டியலை உடைத்து கோவிலிருந்து வெளியே தூக்கி சென்றனர். அதிலிருந்த பணத்தை எடுத்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதேபோல் விருத்தாசலம் அருகே பரவளூர் அண்ணா நகர் கோட்டை மாரியம்மன் கோவிலில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து கொள்ளையடித்து சென்றனர்.

மேலும் பரவளூர் ஆலயம்மன் கோவிலிலும் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றார்கள்.

இதுகுறித்து விருத்தாசலம் மற்றும் மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

3 கோவில்களிலும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

ஒரே கும்பல் 3 கோவில்களிலும் கொள்ளையடித்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு பகுதிகளில் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News