செய்திகள்

சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து - நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்

Published On 2017-11-18 09:12 GMT   |   Update On 2017-11-18 09:12 GMT
சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் காந்தி சிலை அருகே அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று இரவு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மீட்டர் பாக்சில் மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்று வீசியதால் தீ மளமளவென பரவியது. இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் அவசர, அவசரமாக அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

உடனடியாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் மின்கம்பத்தில் ஏறி அங்கு மின்சப்ளையை தடை செய்தனர். இதனால் ஆஸ்பத்திரி இருளில் மூழ்கியது. உடனடியாக மின்சப்ளை தடை செய்யப்பட்டதால் பெரும் தீ விபத்து தடுக்கப்பட்டது.

பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்த மீட்டர் பாக்ஸ் சீரமைக்கப்பட்டது. நோயாளிகள் அனைவரும் சிகிச்சை பெறுவதற்காக ஆஸ்பத்திரிக்கு திரும்பினர். ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News