செய்திகள்

மத்திய அரசை கண்டித்து கடலூரில், கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2017-11-09 16:24 GMT   |   Update On 2017-11-09 16:24 GMT
மத்திய அரசை கண்டித்து கடலூரில் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர்:

பணம் மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏழைகளின் வாழ்வை சூறையாடிய மத்திய அரசை கண்டித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு – லிபரேசன், சோ‌ஷலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில நிர்வாகக்குழு மணிவாசகம், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு தனவேல், சந்திரா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் பணம் மதிப்பு நீக்க நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதித்துள்ளது, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கருப்பு பண மீட்பு, ஊழல் ஒழிப்பு, தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது போன்ற எந்த நோக்கமும் நிறைவேறவில்லை. பணம் மதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வியில் முடிந்ததாக கூறி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாகிகள் மாதவன், சுப்புராயன், ராஜேஷ்கண்ணா, அமர்நாத், இந்திய கம்யூனிஸ்டு கட்சி குளோப் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News