செய்திகள்
பலியான மகந்த்.

பவானி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுவன் பலி

Published On 2017-11-04 11:27 GMT   |   Update On 2017-11-04 11:27 GMT
ஈரோடு மாவட்டம் பவானி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு:

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.

மாவட்டத்தில் அந்தியூர், பவானி, சென்னிமலை, கோபி பகுதிகளில் பலர் பலியாகி உள்ளனர். முக்கியமாக சிறுவர், சிறுமிகளை அதிகமாக டெங்கு பலி வாங்கி உள்ளது.

கடந்த 25-ந்தேதி அந்தியூர் அருகே உள்ள தவுட்டுப்பாளையம் திலகர் வீதியை சேர்ந்த ஜான்சனின் மகனும் பி.பி.எம். பட்டதாரியுமான ரஞ்சித்குமார் (வயது 28) டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

ரஞ்சித்குமார் பலியானதை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 38 ஆனது. அக்டோபர் மாதத்தில் மட்டும் 11 பேர் இறந்துள்ளனர்.

இந்த நிலையில் பவானி அருகே சிறுவன் ஒருவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார். பவானி அருகேயுள்ள ஜம்பை நல்லிபாளையத்தை சேர்ந்தவர் அய்யாவு.

இவரது மகன் மகந்த் (6). இவர் கடந்த பத்து நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து அவரை அந்தியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் காய்ச்சல் சரியாகவில்லை. இதனைத் தொடர்ந்து பவானியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று அதிகாலை காய்ச்சல் அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்காமல் நேற்று மாலை மகந்த் உயிரிழந்தார். இதனால் ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்தது.
Tags:    

Similar News