செய்திகள்

லஞ்சம்- ஊழலில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது: விழுப்புரத்தில் விஜயகாந்த் பேச்சு

Published On 2017-10-24 08:30 GMT   |   Update On 2017-10-24 08:30 GMT
அ.தி.மு.க. அரசின் ஓராண்டில் தமிழகம் லஞ்சம், ஊழலில் முதலிடம் வகிக்கிறது என விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் பேசினார்.
விழுப்புரம்:

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்காததை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் இன்று மதியம் ஆர்ப்பாட்டம் விழுப்புரத்தில் நடந்தது.

இதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஜெயலலிதா அரசு 100 நாள் சாதனை 100 ஆண்டுகள் பேசும் என்றார்கள். ஆனால், ஓராண்டு முடிவதற்குள் ஜெயலலிதா இறந்து விட்டார். இந்த ஓராண்டில் தமிழகம் லஞ்சம், ஊழலில் முதலிடம் வகிக்கிறது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 40 பேர் இறந்து விட்டதாக மக்கள் நல்வாழ்வு துறை கூறுகிறது. நெல்லையில் கந்து வட்டி கொடுமை தாங்காமல் ஒரே குடும்பத்தில் 4 பேர் தீக்குளித்துள்ளனர். இதில் 3 பேர் இறந்து விட்டனர்.


எடப்பாடி அரசால் கந்து வட்டி கொடுமையை ஒழிக்க முடியவில்லை. கந்து வட்டியால் இறப்பது போல் விவசாயிகளும் இறக்க நேரிடும். இதை நான் (விஜயகாந்த்) பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன்.

தமிழகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு விழாவுக்கும் ரூ.20 கோடி வரை செலவு செய்து அள்ளி வீசுகிறார்கள். இதில் இ.பி.எஸ்சும், ஓ.பி.எஸ்சும் வருமானத்தை சம்பாதிக்கிறார்கள்.

எம்.ஜி.ஆரால் இரட்டை இலை கொண்டு வரப்பட்டது. இந்த இரட்டை இலையை முடக்கியவர் ஓ.பி.எஸ்.தான். இப்போது இ.பி.எஸ்சும்- ஓ.பி.எஸ்சும் நன்றாக நடிக்கிறார்கள். அவர்கள் சிவாஜிகணேசன், கமலை விட நன்றாக நடிக்கிறார்கள்.

அ.தி.மு.க.வில் இருக்கும் தொண்டர்கள் விரைவில் தே.மு.தி.க.வுக்கு திரும்புவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News