செய்திகள்

சோழிங்கநல்லூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி

Published On 2017-10-20 07:27 GMT   |   Update On 2017-10-20 07:27 GMT
சோழிங்கநல்லூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோழிங்கநல்லூர்:

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் எங்கையா(65). சென்னை சோழிங்கநல்லூரில் குடும்பத்துடன் தங்கி மகளிர் விடுதி நடத்தி வந்தார்.

எங்கையாவின் மகள்கள் மேகா, சின்னவெங்கம்மா, பேத்திகள் நுதீக், நிஜிதா, பேரன் நாக சேத்தனா, ஒரு வயது பெண் குழந்தை சிவப்பிரியா என அனைவரும் விடுதியிலேயே தங்கி வசித்து வந்தனர்.

நேற்றிரவு விடுதியின் மொட்டை மாடியில் எங்கையா மகள்கள், பேரன், பேத்தி என 7 பேரும் கேக் மற்றும் குலோப்ஜாமூனில் வி‌ஷம் கலந்து சாப்பிட்டு மயங்கி கிடந்தனர்.

இன்று காலை விடுதியில் தங்கியுள்ளவர்கள் மொட்டை மாடிக்கு சென்ற போது 7 பேரும் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எங்கையாவை சென்னை ராயபேட்டை அரசு மருத்துவமனையிலும், மேகா, சின்னவெங்கம்மாவை சென்னை தனியார் மருத்துவமனையிலும், ஒரு வயது குழந்தை உட்பட 4 சிறுவர்களை பெருங்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர்.

மேகா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு கடிதம் எழுதியுள்ளனர்.

அதில் நான், அப்பா, தங்கை, குழந்தைகள் அனைவரும் தற்கொலை செய்து கொள்ளபோகிறோம், எல்லோரும் ஒருநாள் சாகத்தான் போகிறோம். நீ முன்னாலே போனா நான் பின்னாலே சாகனும் தனித்தனியே சாவுவதை விட அனைவரும் ஒன்றாக சாகலாம் என முடிவெடுத்துள்ளோம். அத்தை, மாமா நீங்கள் அனைவரும் நன்றாக இருங்கள், எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என கடிதத்தில் எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News