செய்திகள்

திருவையாறு அருகே விபத்தில் கொத்தனார் பலி

Published On 2017-09-30 13:44 GMT   |   Update On 2017-09-30 13:44 GMT
திருவையாறு அருகே ஆட்டோ மோதிய விபத்தில் கொத்தனார் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவையாறு:

திருவையாறு அருகே கல்யாணபுரம் லிங்கத்தடியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது32). கொத்தனார். இவர் நேற்று மாலை 4.30 மணியளவில் சேட்டு என்பவரது ஆட்டோவில் தனது நண்பர்கள் 2 பேருடன் தஞ்சைக்கு சென்றார்.

மணக்கரம்பை மில் அருகில் சென்றபோது எதிரே வந்த லோடு ஆட்டோ இவர்களது ஆட்டோவின் மீது மோதியது. இதில் குணசேகரன், ஆட்டோ டிரைவர் சேட்டு உட்பட 4 பேரும் படுகாயமடைந்தனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு நேற்று இரவு சிகிச்சை பலனின்றி குணசேகரன் இறந்தார். மற்ற 3 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்த குணசேகரனுக்கு நித்யா என்ற மனைவியும், 4 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். விபத்து குறித்து நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News