செய்திகள்

வாலாஜா வாலிபர் கொலையில் 7 பேர் கும்பல் கைது

Published On 2017-09-28 10:50 GMT   |   Update On 2017-09-28 10:51 GMT
வாலாஜா வாலிபர் கொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 7 பேரிடமும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:

ராணிப்பேட்டை வக்கீல் தெருவை சேர்ந்தவர் வசந்த குமார். இவரது மகன் கிரி என்கிற கிரிதரன் (வயது 27). நேற்று முன்தினம் வாலாஜா வன்னிவேடு ஊராட்சி ரபீக் நகரில் புதிய வீட்டுமனை பிரிவில் கிரிதரன் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக, வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எஸ்.பி.பகலவன் உத்தரவின் பேரில், ராணிப்பேட்டை டி.எஸ்.பி. விஜயகுமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி, சரவணன் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், கிரிதரன் கொலை வழக்கில் வி.சி. மோட்டூரை சேர்ந்த ஜீவா தமிழ்வாணன் (30), ஜெகன் (28), எடப்பாளையத்தை சேர்ந்த ரகுபதி (30), சசி ராமன் (29), பலராமன் (28), ரகு (29), அக்ராவரத்தை சேர்ந்த வினோத் (30) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் ‘திடுக்கிடும்’ தகவல்கள் வெளியாகின. இவர்களில், ஜீவா தமிழ்வாணன், ஜெகன், வினோத் ஆகிய 3 பேருக்கும் கிரிதரன் நண்பர். இவர்களிடமே கிரிதரன் பணம் வாங்கி மோசடி செய்துள்ளார்.

மேலும் ஜீவா தமிழ்வாணனின் காரை அடகு வைத்தும் பணம் பெற்று ஏமாற்றியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள் 3 பேரும், கூட்டு சேர்ந்து கிரிதரனை மது குடிக்க அம்மூர் காப்புக்காட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு வைத்து கிரிதரனை சரமாரியாக தாக்கி கழுத்தை அறுத்து கொன்றுள்ளனர். பிறகு, பிணத்தை காரில் வைத்து சுற்றி, இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடமாக தென்பட்ட வாலாஜா ரபீக் நகரில் புதிய வீட்டுமனை பிரிவில் பிணத்தை வீசிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 7 பேரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News