செய்திகள்

நீட் தேர்வை ஆதரித்து பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

Published On 2017-09-15 11:12 GMT   |   Update On 2017-09-15 11:12 GMT
ஈரோட்டில் ஜவான்பவன் முன்பு பாரதிய கட்சியினர் நீட் தேர்வுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஈரோடு:

மத்திய அரசின் நீட் தேர்வை கண்டித்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாரதீய ஜனதா கட்சியினர் இன்று தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஈரோட்டில் ஜவான்பவன் முன்பு பாரதிய கட்சியினர் நீட் தேர்வுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாவட்ட தலைவர் சிவ சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட பொதுச் செயலாளர் குரு குணசேகரன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் சிவகாமி பரமசிவம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் மாநில வக்கீல் அணி பொறுப்பாளர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைமை தாங்கிய மாவட்ட தலைவர் சிவ சுப்பிரமணியன் பேசும்போது, ‘‘காங்கிரஸ் கட்சி காமராஜர் வளர்த்த கட்சி. ஆனால் இப்போது குஷ்பூ, நக்மா போன்ற நடிகைகளை நம்பி தான் உள்ளது. தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. கல்வி தரம் உயர்த்துவது தான் நீட் தேர்வு’’ என்று கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ‘‘போடாதே போடாதே தி.மு.க.வே இரட்டை வேடம் போடாதே’’. ‘‘வேண்டும் வேண்டும் விசாரணை வேண்டும் ஏழை மாணவி அனிதா சாவுக்கு விசாரணை வேண்டும்’’ உள்பட பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News