செய்திகள்

சாத்தூர் அருகே வைப்பாற்றில் மூழ்கி 2 பேர் பலி

Published On 2017-09-12 16:47 GMT   |   Update On 2017-09-12 16:47 GMT
சாத்தூர் அருகே வைப்பாற்றில் மூழ்கி பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சாத்தூர்:

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்தது. இதையடுத்து சாத்தூர் வைப்பாற்றில் தற்போது தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று சாத்தூர் வெள்ளக்கரையைச் சேர்ந்த நாகராஜ் என்பவரது மனைவி கனகராணி (வயது 51) என்பவர் வைப்பாற்றில் குளித்தார். அப்போது ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்ட கனகராணி கரை திரும்ப முடியாமல் ஆற்றில் மூழ்கி இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து கனகராணியின் உடலை போராடி மீட்டனர்.

இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் மற்றொருவர் வைப்பாற்றில் மூழ்கி இறந்தார். சாத்தூர் அருகே உள்ள குருலிங்காபுரத்தைச் சேர்ந்த நீலகண்டன் (47) என்பவர் வைப்பாற்றில் குளித்துக் கொண்டிருந்த போது ஆழமான பகுதியில் சிக்கி தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

இந்த 2 சம்பவங்கள் குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News