சிவகங்கையில் சொத்து தகராறில் கணவன்-மனைவி கொலை
சிவகங்கை:
சிவகங்கையை அடுத்து உள்ள முத்துப்பட்டி கிராமத்தைச்சேர்ந்தவர் முத்தையா (வயது75). கல்வி துறையில் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவரது மனைவி பாக்கியம் (65) அரசு தாய்-சேய் நல விடுதியில் பணியாற்றியவர். இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
அனைவரும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகிறார்கள். முத்தையா-பாக்கியம் முத்துப்பட்டியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர்.
கடந்த சில நாட்களாக 2 பேரின் நடமாட்டமும் இல்லை. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் தோட்டத்து வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்குள்ள கிணற்றில் 2 பேரும் பிணமாக மிதந்தனர். மேலும் வீட்டின் பொருட்களும் சிதறி கிடந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த சிவகங்கை தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மகன், மகள்களுக்கு சொத்துக்களை பிரிப்பது தொடர்பாக முத்தையாவுக்கு கருத்து வேறுபாடுகள் இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாகவே அவர்களுடன் வசிக்காமல் முத்தையா அவரது மனைவியுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
வயதான தம்பதிகள் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை. எனவே 2 பேரும் கொலை செய்யப்பட்டு உடல்களை மர்ம நபர்கள் கிணற்றில் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
வீட்டில் தனியாக இருந்ததை அறிந்து கொள்ளை கும்பல் பணம்-நகைகளை பறித்துக்கொண்டு 2 பேரையும் கொலை செய்து சென்றார்களா? அல்லது சொத்து பிரச்சினையில் கொலை செய்யப்பட்டார்களா? என விசாரணை நடந்து வருகிறது.
கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில் டி.எஸ்.பி. மங்களேசுவரன் தலைமையில் சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக் டர் ரவிச்சந்திரன், சப்- இன்ஸ்பெக்டர் பூமிநாதன் ஆகியோர் அடங்கிய தனிப் படை அமைக்கப்பட்டுள் ளது.