செய்திகள்

திருநாவலூர் அருகே விவசாயி வீட்டில் ரூ.90 ஆயிரம் கொள்ளை

Published On 2017-07-26 19:48 IST   |   Update On 2017-07-26 19:48:00 IST
திருநாவலூர் அருகே விவசாயி வீட்டில் பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

திருநாவலூர்:

உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே உள்ள திருத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் பீட்டர் (வயது 45) விவசாயி. இவர் தனது குடும்பத்துடன் அதேப்பகுதியில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்துக்கு நேற்று மாலை வீட்டை பூட்டி விட்டு சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். அங்கு பீரோவை உடைத்தனர். அதில் இருந்த 2½ பவுன் நகை, 150 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இந்த நிலையில் கோவிலுக்கு சென்றுவிட்டு இரவில் திரும்பி வந்த பீட்டர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 90 ஆயிரம் ஆகும்.

இது குறித்து திருநாவலூர் போலீசுக்கு பீட்டர் தகவல் தெரிவித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News