செய்திகள்

திருவண்ணாமலை, ஆரணியில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்

Published On 2017-07-03 10:03 GMT   |   Update On 2017-07-03 10:03 GMT
திருவண்ணாமலை, ஆரணியில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அடுத்த வேங்கிகால், இடுக்கு பிள்ளையார் கோவில் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் சரிவர வரவில்லை. இதனால் ஆந்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் திருவண்ணாமலை, காஞ்சி சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் மற்றும் திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர் அம்மாவாசை ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, உடனடியாக தண்ணீர் விட நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் அம்மாவாசை உறுதியளித்தார். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

ஆரணி அருகே வடுகசாத்து ஊராட்சி, கணபதி தாங்கள் பகுதியில் கடந்த 4 மாதங்களாக குடிநீர் சரிவர வழங்கவில்லை.

இதனால் அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் தேவிகாபுரம், ஆரணி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஆரணி தாசில்தார் சுப்பிரமணியன், ஆரணி தாசில்தார் சுப்பிரமணியன், ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பேச்சு வார்த்தை நடத்தினர். உடனடியாக தண்ணீர் விட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் உறுதி அளித்தனர்.இதையடுத்து, சாலை மறியலை கைவிட்டனர்.

Tags:    

Similar News