செய்திகள்

பொதுமக்களை தாக்கிய போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: முத்தரசன்

Published On 2017-07-03 04:12 GMT   |   Update On 2017-07-03 04:12 GMT
கதிராமங்கலத்தில் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்தரசன் கூறினார்.
திருவாரூர்:

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கடந்த 29-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் பிரசார இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. திருவாரூர் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசியதாது:-

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை எதிர்த்து போராடிய பொது மக்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டும் விவசாயிகள் பெற்ற பயிர் கடனை தள்ளுபடி செய்யவில்லை. இதற்காக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

ஆனால் மத்திய, மாநில அரசுகள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய மறுத்து வருவது வேதனையளிக்கிறது. எனவே உடனடியாக கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு இதுவரை எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. எனவே விவசாய தொழிலாளர்கள் குடும்பத்துக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.


தமிழக அரசால் தற்போது செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் உரிமைகள் பறிபோகின்றன. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கும். வேலையின்மை உருவாகும். இது ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல. இந்த வரி விதிப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு முத்தரசன் கூறினார்.
Tags:    

Similar News