செய்திகள்

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை: அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2017-06-06 23:28 IST   |   Update On 2017-06-06 23:28:00 IST
இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்துள்ள மத்திய அரசை கண்டித்து கடலூரில் அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர்:

இறைச்சிக்காக மாடுகளை விற்கவும், வாங்கவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதை கண்டித்தும், இந்த தடையை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மத்தியக்குழு உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தி.மு.க. மாநில மாணவரணி செயலாளர் இள.புகழேந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், காங்கிரஸ் கட்சியின் மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மணிவாசகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட நிர்வாகி திருமேனி, தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், மனித நேய ஜனநாயக கட்சி தலைமை கழக பேச்சாளர் மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாட்டு இறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், என் உணவு, என் உரிமை அதில் தலையிடாதே என்று கூறி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர்.

இதில் தி.மு.க. நகர செயலாளர் ராஜா, காங்கிரஸ் நகர செயலாளர் கோபால், தமிழக வாழ்வுரிமை கட்சி நகர செயலாளர் ஆனந்த், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் குளோப், எஸ்.டி.பி.ஐ. நகர தலைவர் அப்துல்ரஹீம், உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News