காட்டுமன்னார்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: 2 பேர் உடல் நசுங்கி பலி
ஸ்ரீமுஷ்ணம்:
நாகை மாவட்டம் வக்காரமாரி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 55), விவசாயி. இவர் நேற்று தனது பேத்தி ஜெமி (5)யுடன் மோட்டார் சைக்கிளில் காட்டுமன்னார்கோவிலுக்கு சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு தனது சொந்த ஊரான வக்காரமாரிக்கு நேற்று இரவு திரும்பிக் கொண்டிருந்தார்.
கொள்ளிடம் ஆற்றுபாலத்தில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தபோது அதே பகுதியில் வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ராஜசேகர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட குழந்தை ஜெமி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தாள். ராஜ சேகர் படுகாயம் அடைந்தார்.
விபத்துகுறித்து தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ராஜசேகரை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன்அளிக்காமல் ராஜசேகர் பரிதாபமாக இறந்தார். தாத்தாவும், பேத்தியும் விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.