காஞ்சீபுரத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிராக மாணவ-மாணவிகள் திரண்டனர்: கலெக்டரிடம் மனு கொடுத்தனர்
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த படூர் கிராமத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பள்ளி மாணவ-மாணவிகள் திரண்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஏராளமான மதுக்கடைகள் அடைக்கப்பட்டது. மேலும் அதற்கு பதிலாக புதிதாக சி.ஏ.எம். பகுதியில் கடைகள் திறக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள படூர் கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.
இதனை கண்டித்து அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள் திரண்டு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், “படூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட டாஸ்மாக் கடையை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தனர்.