செய்திகள்

பக்தர்களை கோவிலுக்குள் வைத்து பூட்டியதால் பரபரப்பு: 20 பேர் கைது

Published On 2017-04-13 10:12 GMT   |   Update On 2017-04-13 10:12 GMT
போரூர் அருகே உள்ள பாலமுருகன் கோவிலை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்களை கோவிலுக்குள் வைத்து பூட்டிய 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி:

போரூர், ஆர்.இ. நகரில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ராமநாதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பாலமுருகன் கோவில் உள்ளது.

இதனை அதே பகுதியை சேர்ந்த தாமோதரன் தனியாக நிர்வகித்து வந்தார்.

இந்த நிலையில் பல்வேறு முறைகேடு புகாரின் அடிப்படையில் பாலமுருகன் கோவிலை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதையடுத்து இன்று காலை கோவில் தக்கார் பாஸ்கரன் பொறுப்புகளை ஏற்பதற்காக பாலமுருகன் கோவிலுக்கு வந்தார். அவருடன் அறநிலையத்துறை உதவி கமி‌ஷனர் விஜயா மற்றும் அதிகாரிகளும் வந்து இருந்தனர்.

இதுபற்றி அறிந்த நிர்வாகி தாமோதரன், அவரது மகன் சுரேஷ் உள்பட அவர்களது ஆதரவாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு முன்கூட்டியே வந்தனர்.


அவர்கள், அதிகாரிகள் உள்ளே செல்லாமல் இருப்பதற்காக பக்தர்கள் கோவிலுக்குள் இருந்த போதே கதவை வெளிப்புறம் பூட்டினர். இதனால் கோவிலுக்குள் இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் போரூர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் தகராறில் ஈடுபட்ட தாமோதரன் உள்பட 20 பேரை கைது செய்தனர்.

பின்னர் கோவில் கதவு பூட்டை உடைத்து உள்ளே இருந்த பக்தர்களை வெளியே வரவழைத்தனர். இதைத்தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பூட்டி இருந்த கோவில் அலுவலக கதவை உடைத்து திறந்தனர்.

அங்கிருந்த ஆவணங்கள் மற்றும் கோவிலின் சொத்து மதிப்புகளை கணக்கிட்டனர். பாலமுருகன் கோவிலும் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

Similar News