செய்திகள்

சுரண்டை அருகே வீடு புகுந்து பெண்ணிடம் சில்மிசம் செய்த சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

Published On 2017-03-17 11:38 GMT   |   Update On 2017-03-17 11:38 GMT
சுரண்டை அருகே வீடு புகுந்து பெண்ணிடம் சில்மிசம் செய்த சப்-இன்ஸ்பெக்டரை போலீஸ் சூப்பிரண்டு விக்கிரமன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
நெல்லை:

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரைச் சேர்ந்தவர் இன்பராஜ் (வயது 52). மூன்றடைப்பு போலீஸ் ஸ்டே‌ஷனில் சிறப்பு சப்­இ­ன்ஸ்பெக்டர் ஆக உள்ளார். இவரும் கழுநீர்குளம், தெற்கு தெருவைச் சேர்ந்த குத்தாலிங்கம் மகன் ஆட்டோ டிரைவர் இசக்கிமுத்துவும் (35), நண்பர்கள். நேற்று முன்தினம் மதியம் குடிபோதையில் இருந்த இவர்கள் இருவரும் கழுநீர்குளம் தெற்கு தெருவை சேர்ந்த முருகன் மனைவி அன்னம் (38) என்பவருடைய வீட்டில் அத்துமீறி நுழைந்தனர்.

அங்கு தனியாக இருந்த அன்னத்தை கையை பிடித்து இழுத்து சில்மிஷம் செய்தார்களாம். அதிர்ச்சி அடைந்த அன்னம் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சப்­இ­ன்ஸ்பெக்டர் இன்பராஜ், இசக்கிமுத்து ஆகிய 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்பு அவர்கள் வீரகேரளம்புதூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து அன்னம் தனது கணவர் முருகனுடன் சென்று, வீரகேரளம்புதூர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறப்பு சப்­இ­ன்ஸ்பெக்டர் இன்பராஜ், ஆட்டோ டிரைவர் இசக்கிமுத்து ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்கிரமனுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக இன்பராஜை போலீஸ் சூப்பிரண்டு விக்கிரமன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

Similar News