செய்திகள்

அரசு விடுதியில் தரமில்லாத உணவு வினியோகம்: மாணவர்கள் போராட்டம்

Published On 2017-03-15 11:55 GMT   |   Update On 2017-03-15 11:55 GMT
பழனி ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தரம் இல்லாத உணவு வழங்குவதை கண்டித்து மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனி:

பழனி- திண்டுக்கல் ரோட்டில் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி உள்ளது. பழனியாண்டவர் கலைக்கல்லூரியை சேர்ந்த 140 மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என தொடர்ந்து மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்களே வலிமையாக உள்ள நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டிடம் தரமில்லாமல் எப்போது இடிந்து விழுமோ? என்ற நிலையில் உள்ளது.

மேலும் மாணவர்களுக்கு தரமில்லாத உணவுகள் தயார் செய்து வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து பலமுறை விடுதி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் இன்று மாணவர்கள் காலையில் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த உணவை விடுதி முன்பு வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இது குறித்து கூறுகையில், விடுதியில் நிரந்தர பணியாளர்கள் இல்லாததால் துப்புரவு பணி கூட செய்வதில்லை. விலங்குகள் கூட உண்ண முடியாத உணவினை வழங்குகின்றனர். அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து தொடர்ந்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர். இது குறித்து விடுதி வார்டன் தெரிவிக்கையில், நிரந்தர பணியாளர்களை நியமிக்க கோரி அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். விரைவில் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டதும் மாணவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.

Similar News