சத்தியமங்கலம் காட்டில் வனவிலங்குகளுக்கு தொட்டி கட்டி குடிநீர் வினியோகம்
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்ட முழுவதும் தற்போது வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளது. விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாமல் பயிர்கள் எல்லாம் கருகி போய்விட்டன. குடிநீர் பஞ்சமும் ஏற்படும் அபாயமும் உள்ளது.
ஈரோடு மாவடட் சத்தியமங்கலம் வனப் பகுதியையும் வறட்சி விட்டு வைக்கவில்லை. கோடையின் சுட்டெரிக்கும் வெயிலால் வனப்பகுதி முழுவதும் காய்ந்து போய் கிடக்கிது. மரங்கள் செடி கொடிகள் எல்லாம் பச்சையம் இழந்து கருகி விட்டன.
வனப்பகுதிக்குள் தண்ணீர் எதுவும் இல்லாததால் வனவிலங்குகள் தண்ணீர் கிடைக்காமல் காட்டை விட்டு வெளியேற தொடங்கி உள்ளது.
சத்தியமங்கலம் வனப் பகுதிகளான ஆசனூர், தலமலை, திம்பம், கேர்மாளம், கோட்டாடை, மாவநத்தம், ராமரணை ஆகிய வனப்பகுதிகளில் யானைகள், காட்டெருமைகள், புலி, சிறுத்தை, கரடி, செந்நாய்கள், மான்கள் என ஆயிரக்கணக்கான வனவிலங்குகள் வசிக்கின்றன. வனப்பகுதிக்குள் தண்ணீர் இல்லாததால் இவை தண்ணீர் இன்றி தவித்தன.
மேலும் காட்டில் உள்ள வனக்குட்டையில் உள்ள தண்ணீரும் வற்றி குறைந்த அளவே புழு..பூச்சியுடன் உள்ளது.
இதனால் அந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் விலங்குகளுக்கு நோய் ஏற்படும் சூழ்நிலையும் உள்ளது.
இதையொட்டி வன விலங்குகளுக்கு தண்ணீர் தாகத்தை தணிக்க சத்தயமங்கலம் வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இதனால் வனப்பகுதி உள்ளே வனத்துறை சார்பில் தொட்டிகள் அமைத்து அதில் நல்ல தண்ணீரை நிரப்பி வைத்து உள்ளனர்.
வனவிலங்குகளும் அந்த தண்ணீரை பருகி தாகத்தை தணித்து வருகிறது. தொட்டிகளில் தண்ணீர் காலியானதும் மீண்டும் ஊற்றி நிரப்பி வருகிறார்கள்.