செய்திகள்

காஞ்சீபுரம் ஜவுளிக்கடையில் ‘லிப்டில்’ சிக்கி ஊழியர் பலி

Published On 2017-02-22 12:28 IST   |   Update On 2017-02-22 12:28:00 IST
காஞ்சீபுரம் ஜவுளிக்கடையில் சுத்தம் செய்தபோது ‘லிப்டில்’ சிக்கி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் காந்தி சாலையில் எம்.வி.எம். பச்சையப்பாஸ் ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது. இதன் கிளைகள் காஞ்சீபுரத்தில் 4 இடங்களில் உள்ளன. சுமார் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

காந்தி சாலையில் உள்ள கடையில் காஞ்சீபுரம் மேட்டுத் தெருவை சேர்ந்த ஜாகீர் உசேன் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று மாலை அவர் கடையில் உள்ள லிப்டின் மேல் பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மற்றொரு ஊழியர், ஜாகீர் உசேன் இருப்பதை கவனிக்காமல் லிப்டை இயக்கியதாக தெரிகிறது. லிப்ட் இயங்கியதால் அதில் சிக்கிய ஜாகீர் உசேன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

ஊழியரின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் ஜவுளிக்கடை முன்பு ஏராளமானோர் திரண்டனர். அவர்களை போலீசார் கலைந்து போகச் செய்தனர். மேலும் ஜாகீர் உசேனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சின்ன காஞ்சீபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News