செய்திகள்

நாங்குநேரி அருகே கார் கவிழ்ந்து தனியார் நிறுவன ஊழியர் பலி: மனைவி, மகள் படுகாயம்

Published On 2017-02-13 10:50 GMT   |   Update On 2017-02-13 10:50 GMT
நாங்குநேரி அருகே கார் கவிழ்ந்த விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி, மகள் படுகாயம் அடைந்தனர்.
நெல்லை:

குமரி மாவட்டம் ஆசாரிபள்ளத்தை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது52). இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் மோகன்தாஸ், அவரது மனைவி ஜேக்குலின் லீமா (45), மகள் ஜெனிபர் மோனிஷா (22) ஆகிய 3 பேரும் காரில் சொந்த ஊருக்கு வந்து கொண்டு இருந்தனர். காரை மோகன்தாஸ் ஓட்டினார்.

நாங்குநேரி வாகைகுளம் அருகே உள்ள நான்கு வழிச்சாலையில் கார் வந்த போது, முன்னால் சென்ற வாகனம் திடீரென வேகத்தை குறைத்ததால் அதன் மீது மோதாமல் இருக்க மோகன்தாஸ் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதில் கார் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த மோகன்தாஸ், ஜேக்குலின் லீமா, ஜெனிபர்மோனிஷா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக அவர்களை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மோகன்தாஸ் பரிதாபமாக இறந்தார். ஜேக்குலின் லீமா, ஜெனிபர் மோனிஷா ஆகிய 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News