செய்திகள்

பாளையில் ரெயில்வே அதிகாரியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2017-02-13 16:17 IST   |   Update On 2017-02-13 16:17:00 IST
பாளையில் ரெயில்வே அதிகாரியின் மனைவி குழந்தையில்லாத விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

பாளை மகாராஜநகர் 6-வது தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது58). இவர் தூத்துக்குடி ரெயில்வே நிலையத்தில் ஸ்டேசன் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பொன்னம்மாள் என்ற பிரேமா (49). இவர்களுக்கு குழந்தை இல்லை.

இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் பிரேமா வாழ்க்கையில் வெறுப்படைந்து விரக்தியுடன் காணப்பட்டார். நேற்று கணேசன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் வேலைக்கார பெண்ணும், பிரேமாவும் இருந்தனர்.

மதியம் பிரேமா சாப்பிட்டு விட்டு படுக்கை அறையை பூட்டி கொண்டு படுத்து விட்டாராம். வேலைக்கார பெண் மற்ற வேலையை கவனித்துள்ளார். இந்த நிலையில் இரவில் வீடு திரும்பிய கணேசன், படுக்கை அறையை திறந்து பார்த்த போது, அங்கு பிரேமா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து கணேசன், ஐகிரவுண்டு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேமாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

குழந்தையில்லாத ஏக்கத்தில் பிரேமா தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருந்த போதிலும் அவரது சாவுக்கு வேறு எதுவும் காரணமா? என போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News