செய்திகள்

திருத்துறைப்பூண்டி அருகே வரதட்சணை கொடுமையால் ஆசிரியை தற்கொலை

Published On 2017-02-11 17:00 IST   |   Update On 2017-02-11 16:59:00 IST
வரதட்சணை கொடுமையால் ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஆசிரியையின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆலத்தம்பாடியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி பானுமதி. இவர்களின் மகன் செந்தில்குமார் (வயது35). விவசாயி. இவருக்கும் சென்னையை சேர்ந்த தர்மலிங்கம்-முல்லைகொடி ஆகியோரின் மகள் அனுசுயா (31) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அனுசுயா புதுக்கோட்டை மாவட்டம் குறிஞ்சிவயல் என்ற ஊரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

கடந்த 4-ந் தேதி அனுசுயா வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி அனுசுயாவின் தாய் முல்லைகொடி ஆலிவலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் செந்தில்குமார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் அனுசுயா, மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும், இதற்கு செந்தில்குமாரின் தந்தை ராஜேந்திரன், தாயார் பானுமதி உள்ளிட்டோர் உடந்தையாக இருந்ததாகவும் கூறி உள்ளார்.

இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News