செய்திகள்

செல்போன் ஷோரூம் ‌ஷட்டரை உடைத்து திருட முயன்ற கல்லூரி மாணவர்கள் கைது

Published On 2017-02-06 13:33 IST   |   Update On 2017-02-06 13:33:00 IST
ஈரோடு அருகே செல்போன் ஷோரூம் ‌ஷட்டரை உடைத்து திருட முயன்ற கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு:

ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனியை சேர்ந்தவர் காசி (வயது 36). இவர் ஈரோடு மூலப்பட்டறையில் செல்போன் ஷோரூம் வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு காசி வழக்கம்போல் ஷோரூமை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

இந்தநிலையில் நள்ளிரவில் அந்த வழியாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது செல்போன் கடையின் பூட்டை ஒரு கும்பல் உடைத்துக்கொண்டு இருந்தது. உடனே போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர்கள், கேரள மாநிலம் கோழிக்கோடு செம்மந்தோப்பு அம்பாயி ஹவுஸ் பகுதியை சேர்ந்த கிருஷ்ணனின் மகன் ஆதர்ஸ் (வயது 21), திருச்சூரை அடுத்த குருவாயூர் அரணைதோட்டத்தை சேர்ந்த முகமது சாகத்தின் மகன் சாகில் (21), ஆலப்புழா மானார் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணனின் மகன் நந்து (21), பத்தினம்திட்டாவை சேர்ந்த அகமதுசலாம் மகன் செம்மின்ஷா (21), பத்தினம்திட்டா பெருநாட்டை சேர்ந்த சுரேஷின் மகன் விஷ்ணு (20), கோழிக்கோடு நடுவழிவம் பகுதியை சேர்ந்த ராஜீவ் மகன் நித்தின் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இவர்கள் 6 பேரும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயர் கல்லூரியில் படித்து வருவதும், கல்லூரி விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு செல்வதற்காக வந்தவர்கள், ஈரோட்டில் உள்ள செல்போன் ஷோரூமில் திருட முயன்றதும் தெரியவந்து உள்ளது. அதைத்தொடர்ந்து மாணவர்கள் 6 பேரையும் ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் கைது செய்தனர். அதில் 2 பேரை கோபி சிறையிலும் 4 பேரை பொள்ளாச்சி சிறையிலும் அடைத்தனர்.

Similar News