செய்திகள்
மாரடைப்பால் இறந்த விவசாயி தங்கவேல்.

மொடக்குறிச்சி அருகே கரும்பு விவசாயி மாரடைப்பால் மரணம்

Published On 2017-01-06 16:22 IST   |   Update On 2017-01-06 16:22:00 IST
மொடக்குறிச்சி அருகே தண்ணீர் இல்லாமல் கரும்பு பயிர் அழிந்ததை கண்டு விவசாயி மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு:

ஈரோடு அருகே உள்ள மொடக்குறிச்சி அடுத்த ஓலப்பாளையம் கருக்கங்காட்டுதோட்டம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 65) விவசாயி. இவர் கரியாகவுண்டன்வலசு பகுதியில் சின்னுசாமி என்பவரது 2½ ஏக்கர் விவசாய நிலத்தை கடந்த 3ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்து கரும்பு பயிரிட்டு வந்தார்.

இந்நிலையில் இவருடைய கரும்பு தோட்டத்திற்கு தேவையான உரங்கள், விதைகள் மற்றும் பராமரிப்பு கூலிக்காக பல்வேறு இடங்களில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த 2மாதங்களாக கடும் வறட்சி ஏற்பட்டு தண்ணீரின்றி கரும்பு பயிர் முற்றிலும் அழிந்து விட்டது

கடந்த நான்கு நாட்களாகவே தங்கவேல் கரும்புபயிர் முற்றிலும் காய்ந்து போனதால் மனமுடைந்து காணப்பட்டார். மற்றவர்களிடம் இதுகுறித்து கூறி வருத்தப்பட்டார்.

இந்நிலையில் நேற்று மாலை கரும்பு தோட்டத்திற்கு செல்வதாக சென்றவர் இரவு வரை வீடு திரும்பாததால், பதறிப்போன அவரது மகன்கள் தோட்டத்திற்கு சென்றபோது அங்கு தங்கவேல் மயங்கிகிடந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆம்புலன்ஸ் வேன் வரவழைக்கப்பட்டது. அவர்கள் வந்து பரிசோதனை மேற்கொண்டபோது, தங்கவேல் மாரடைப்பால் ஏற்கனவே இறந்து போனது தெரியவந்தது. மொடக்குறிச்சி பகுதியில் மாரடைப்பால் விவசாயி இறந்தது விவசாயிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்துபோன தங்கவேலுக்கு லட்சுமி (53) என்ற மனைவியும், கதிரேசன், தேவராஜன் என்ற மகன்களும் உள்ளனர்.

இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News