செய்திகள்

கோபி அருகே நிச்சயித்த பெண் காதலனுடன் ஓடியதால் வாலிபர் தற்கொலை

Published On 2017-01-05 10:52 IST   |   Update On 2017-01-05 10:52:00 IST
கோபி அருகே நிச்சயித்த பெண் காதலனுடன் ஓடியதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
கோபி:

கோபி அடுத்த பச்சைமலை அடிவாரப் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் மணிகண்டன் (வயது22). வேன் டிரைவர்.

மணிகண்டனுக்கும் உசிலம்பட்டி அருகே உள்ள கோட்டைபட்டியை சேர்ந்த லாவண்யாவுக்கும் இரண்டு வீட்டு பெற்றோர்கள் திருமணம் பற்றி பேசி முடித்தனர்.

இதன்படி கடந்த மாதம் 5-ந் தேதி(திங்கட்கிழமை) நிச்சயதார்த்தம் நடைபெற முடிவு செய்யப்பட்டிருந்தது. நிச்சயதார்த்ததிற்கான ஏற்பாடுகளில் இரு வீட்டு பெற்றோர்களும் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 3-ந் தேதி(சனிக்கிழமை) லாவண்யா காதலனுடன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். இதையெடுத்து நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டது.

தனக்கு பேசிமுடித்த பெண் காதலனுடன் ஓடியதிலிருந்து மணிகண்டன் மனவேதனையுடன் இருந்தார். அவரது பெற்றோர் ஆறுதல் கூறி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மணிகண்டன் தற்கொலை செய்ய முடிவெடுத்து சேலையால் தூக்கு போட்டார்.

நீண்ட நேரமாக மணிகண்டன் வீடு பூட்டி இருப்பதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் கதவை தட்டி உள்ளனர். பதில் வரவில்லை. கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்கு மணிகண்டன் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அவரை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மணிகண்டனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கோபி சப்- இன்ஸ்பெக்டர் பழனிசாமி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Similar News