செய்திகள்

சிதம்பரம் அருகே கடல் சீற்றம்: படகு கவிழ்ந்து மீனவர் பலி

Published On 2017-01-04 15:47 IST   |   Update On 2017-01-04 15:47:00 IST
சிதம்பரம் அருகே கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்ததில் மீன்பிடிக்க சென்ற மீனவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம்:

சிதம்பரத்தை அடுத்த புதுச்சத்திரம் அருகே உள்ள ரெட்டியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 53). அதே பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (47). 2 பேரும் மீனவர்கள்.

இன்று அதிகாலை ராமமூர்த்தியும், நடராஜனும் ரெட்டியார்பேட்டை பகுதியில் இருந்து பைபர் படகு மூலம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். சிறிது தூரம் சென்ற போது கடல் சீற்றமாக இருப்பது தெரியவந்தது. உடனே 2 பேரும் கரைக்கு திரும்ப முடிவு செய்தனர்.

அந்த சமயத்தில் கடல் சீற்றம் அதிகமானதால் பைபர் படகு கவிழ்ந்தது. இதில் ராமமூர்த்தி மற்றும் நடராஜன் 2 பேரும் தண்ணீரில் மூழ்கினர். நடராஜன் நீந்தி கரைக்கு திரும்பினார். ஆனால் ராமமூர்த்தி கடல் அலையில் சிக்கி நீந்தமுடியாமல் பரிதாபமாக உயிரிழந்தார். சிறிது நேரத்தில் ராமமூர்த்தியின் உடல் புதுச்சத்திரம் கடற்கரையில் ஒதுங்கியது.

தகவல் அறிந்த புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் ராம மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ராமமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மீன்பிடிக்க சென்ற மீனவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்து.

Similar News