செய்திகள்

சேலம் அருகே கொலை, கொள்ளை வழக்கில் தேடப்பட்ட மேலும் 2 பேர் கைது

Published On 2016-12-26 12:08 GMT   |   Update On 2016-12-26 12:08 GMT
சேலம் அருகே கொலை,கொள்ளை வழக்கில் தேடப்பட்ட மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 15 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது.

ஆட்டையாம்பட்டி:

ஆட்டையாம்பட்டி பகுதிகளில் நடைபெற்ற கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய கடந்த சில ஆண்டுகளாக தேடி வந்தனர்.

ஆனால் குற்றவாளிகள் போலீசில் பிடிபடாமல் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தனர். இதனால் அவர்களை கண்டுபிடித்து கைது செய்ய ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசாரின் பிடியில் கடத்தூர், காட்டுவளவு பகுதியை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் குமார் என்பவரை கொலை செய்து, கொள்ளையடித்த வழக்கில் கடந்த 3 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகளான கடத்தூர் பகுதியை சேர்ந்த பாஸ் என்கிற பாஸ்கரன் (வயது 33), பெரிய ஆண்டிப்பட்டி, தேவன்காட்டை சேர்ந்த அய்யனார்சாமி(30), பனங்காட்டை சேர்ந்த பிரபு(27) ஆகிய 3 பேரும் சிக்கினார்கள். இவர்களை தனிப்படை போலீசார் கைது செய்து, 21 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகளான பெரிய ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார்(26), ஆட்டையாம்பட்டி, பாலாஜி நகரை சேர்ந்த ராஜா(26) ஆகிய 2 பேரையும் இன்று காலையில் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 15 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது.

Similar News