விருத்தாசலத்தில் வீடு புகுந்து 5 பவுன் நகை-பணம் கொள்ளை
விருத்தாசலம்:
விருத்தாசலம் அருகே உள்ள மனவாளநல்லூரை சேர்ந்தவர் கலியன். இவரது மனைவி யோகமணி (வயது 50). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு யோகமணி வீட்டை பூட்டிவிட்டு தனது உறவினர் வீட்டுக்கு சென்றார்.
இதனை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் இன்று அதிகாலை யோகமணி வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் 5 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.
பின்னர் அருகில் இருந்த ராமர் என்பவரது வீட்டின் பூட்டையும் உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர். சத்தம்கேட்டு கண்விழித்த ராமர் மர்மநபர்களை பிடிக்க முயன்றார். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர்.
கொள்ளையர்கள் தப்பி செல்லும்போது யோகமணி வீட்டில் கொள்ளையடித்த பொருட்களில் மணிபர்ஸ் தவறி விழுந்தது. இதை அந்தவழியாக சென்ற ஒருவர் எடுத்து பார்த்தபோது அதில் யோகமனியின் அடையாள அட்டை இருந்தது. உடனே அந்த மணிபர்சை யோகமனியின் உறவினரிடம் ஒப்படைத்தனர்.
அதை பார்த்து அந்த உறவினர் யோகமணியின் வீட்டுக்கு விரைந்துசென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பீரோவில் உள்ள பொருட்கள் சிதறிகிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே யோகமணிக்கும், விருத்தாசலம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.