செய்திகள்

சிதம்பரம் அருகே போலீஸ்காரரை தாக்கி கொலை மிரட்டல்: 2 பேர் கைது

Published On 2016-12-21 10:12 IST   |   Update On 2016-12-21 10:13:00 IST
சிதம்பரம் அருகே போலீஸ்காரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வயலூர் கிராமத்தை சேர்ந்தவர் கவுதமன் (வயது 28). இவர் கடலூரில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். வேலை முடிந்ததும் கவுதமன் கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு வந்தார்.

பின்னர் அங்கிருந்து தனது மோட்டார் சைக்கிளில், வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். வயலூர் போக்குவரத்து நகர் என்ற இடத்தில் சென்ற போது அதே கிராமத்தை சேர்ந்த அருணாசலம் என்பவர் தனது மாடுகளை நடுரோட்டில் ஓட்டிச்சென்றார்.

உடனே கவுதமன் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, அருணாசலத்திடம் மாடுகளை சாலையோரத்தில் ஓட்டிச் செல்லுங்கள் என கூறினார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் கலைந்து சென்றனர்.

இது பற்றி அருணாசலம் தனது உறவினரான தங்கராசு குடும்பத்தினரிடம் கூறினார். இதில் ஆத்திரமடைந்த தங்கராசு மகன்கள் கண்ணன் (32), சுதாகர் (29) ஆகிய 2 பேரும் கவுதமனின் வீட்டிற்கு சென்று, அவரது குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தட்டிக்கேட்ட கவுதமனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து கவுதமன் சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணன், சுதாகர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Similar News