செல்போன் கடை பூட்டை உடைத்து 2½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்தவர் செந்தில்வேலன் (வயது40). இவர் நாகுடியில் உள்ள இந்தியன் வங்கி அருகே செல்போன் கடை வைத்துள்ளார்.
இந்நிலையில் வழக்கம் போல் செந்தில்வேலன் இரவு 9 மணிக்கு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் அதிகாலை 4 மணிக்கு இவர் கடையின் அருகே டீ கடை வைத்துள்ள நல்லம்மாள் என்ற நபரிடம் இருந்து உங்கள் கடையின் பூட்டு உடைந்து கிடப்பதாக செந்தில் வேலனுக்கு போன் வந்தது. இதனால் செந்தில்வேலன் நாகுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பாலமுருகன், நாகுடி சப் இன்ஸ்பெக்டர் மனோகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் அங்கு சோதனை நடத்தியதில் பூட்டை பிளேடால் வெட்டி உள்ளே சென்றதும், கடையில் உள்ள விலை உயர்ந்த செல் போன்கள், ரீசார்ஜ் கார்டுகள் மற்றும் பென் டிரைவ் என ரூ.2½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடி சென்றதும் தெரியவந்தது. பின்னர் கைரேகை நிபுனர் குழு வரவழைக்கப்பட்டு கைரேகை எடுக்கப்பட்டது.
இதுகுறித்து நாகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.