செய்திகள்

வெள்ளகோவில் அருகே தலையில் கல் விழுந்து தொழிலாளி பலி

Published On 2016-12-17 10:41 GMT   |   Update On 2016-12-17 10:41 GMT
வெள்ளகோவில் அருகே கிணறு வெட்டிய போது தலையில் கல் விழுந்ததில் தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அஞ்சுவல்லகாடு பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 36). கிணறு வெட்டும் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளது.

சம்பவத்தன்று செந்தில் வெள்ளகோவில் கம்பளியாம்பட்டியை சேர்ந்த பழனிசாமி என்பவரது தோட்டத்தில் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டார். கிணற்றில் இறங்கி அங்குள்ள கற்களை கயிறு மூலம் மேலே அனுப்பிக்கொண்டிருந்தார். அப்போது ராட்சத பாறையை கிணற்றில் இருந்து மேலே அனுப்பினார். திடீரென கயிறு அறுந்து கிணற்றுக்குள் இருந்த செந்தில் மீது விழுந்தது.

படுகாயம் அடைந்த செந்தில் ரத்தவெள்ளத்தில் மயங்கினார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் காங்கயத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News