செய்திகள்

இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் ஏ.டி.எம். மையங்கள் மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதி

Published On 2016-12-15 22:46 IST   |   Update On 2016-12-15 22:47:00 IST
இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் ஏ.டி.எம். மையங்கள் மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
இலுப்பூர்:

இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றுவதற்கும், வங்கி கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கும் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் நேற்றும் பெரும்பாலான வங்கி ஏ.டி.எம். மையங்கள் மூடப்படதால் மக்கள் பணம் எடுக்க முடியாமல் அவதிபட்டனர்.

இலுப்பூர், அன்னவாசல் ஆகிய இடங்களில் இருந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்து அன்றாட செலவுக்கு ரூ.2000 எடுத்துக்கொள்ளலாம் என்று பொதுமக்கள் ஏ.டி.எம். மையத்திற்கு படையெடுத்தனர். ஆனால் இலுப்பூரில் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்திற்கு அருகில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் மட்டுமே சில நாட்கள் பணம் நிரப்பப்பட்டதால் அந்த ஏ..டி.எம் மையத்தில் பணம் எடுக்க பொதுமக்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று பணத்தை எடுத்தனர். இருப்பினும் இலுப்பூர், அன்னவாசல் ஆகிய இடங்களில் உள்ள வேறு எந்த ஏ.டி.எம். எந்திரத்திலும் பணம் நிரப்பப்படவில்லை.

இலுப்பூர், அன்னவாசல் ஆகிய இடங்களில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் 5 ஏ.டி.எம். மையங்கள், ஒரு தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளபோதும் ஒரு ஏ.டி.எம் எந்திரத்திலும் பணம் நிரப்பாததால் ஏ.டி.எம். மையங்கள் பூட்டியே கிடக்கிறது. இதனால் பணம் எடுக்கலாம் என்று ஏ.டி.எம். மையங்களுக்கு செல்லும் பொதுமக்கள் ஏமாற்றத்துடனே திரும்பி செல்கிறார்கள்.

இதன் காரணமாக தங்களின் வங்கிக்கணக்கில் பணம் இருந்தும் அன்றாட செலவிற்கு கூட பணம் எடுக்கமுடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

Similar News