செய்திகள்

ஓமலூர் அருகே 8-ம் வகுப்பு மாணவி திடீர் தற்கொலை

Published On 2016-12-15 16:26 GMT   |   Update On 2016-12-15 16:27 GMT
ஓமலூர் அருகே 8-ம் வகுப்பு மாணவி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொண்டலாம்பட்டி:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி உதயம் நகரை சேர்ந்தவர் செல்வம்  (37). கொத்தனார். இவருக்கு சுஜா என்கிற மாதம்மாள் (வயது 14) என்ற மகளும், 1 வயதில் மகனும் உள்ளனர்.

வெள்ளாளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுஜா 8-ம் வகுப்பு படித்து வந்தார்.  தற்போது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, பெற்றோருக்கு உதவியாக சிறு, சிறு வேலைகளை பார்த்துக் கொண்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று மாலையில் தந்தையும்,  தாயும் வெளியே சென்றனர். மாலை 6 மணி அளவில்  சுஜாவும், அவருடைய சித்தியும் வீட்டின் வாசல் படியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது சுஜா, நான் வீட்டுக்குள் சென்று விட்டு சற்று நேரத்தில் திரும்பி வந்து விடுகிறேன் என கூறி விட்டு சென்றார். வீட்டுக்குள் சென்ற அவர் வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை.

வெகு நேரமாகியும் வீட்டில் இருந்து சுஜா வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது சித்தி வாசல் படியில் இருந்து எழுந்து நேராக வீட்டுக்குள் சென்று பார்த்தார்.

அப்போது அங்கு சுஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை கண்டு கதறி அழுதார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், கொத்தனார் செல்வம் தனது மகள் இறப்பு குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுஜா எதற்காக திடீரென தற்கொலை செய்து கொண்டார்.இவரது தற்கொலையில் உள்ள மர்மங்கள் என்ன?. இதில் யார்? யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் அனைத்து விபரங்களும் தெரியவரும் என தெரிவித்தனர்.

Similar News