செய்திகள்

கடல் சீற்றம்: கடலூர் மீனவர்கள் 6-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை

Published On 2016-12-11 16:35 IST   |   Update On 2016-12-11 16:35:00 IST
கடல் சீற்றம் காரணமாக கடலூரில் மீனவர்கள் இன்று 6-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.
கடலூர்:

தென்கிழக்கு வங்க கடல் பகுதி மற்றும் தென்மேற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான வார்தா புயல் நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையொட்டி கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கடலூரில் தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இன்றும் கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. அதிக உயரத்துக்கு அலைகள் எழுந்தன.

கடல் சீற்றம் காரணமாக கடலூரில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இன்று 6-வது நாளாக கடலூர் துறைமுகம், தேவானாம் பட்டினம், தாழங்குடா, ராசாபேட்டை, அக்கரை கோரி, பரங்கிபேட்டை, நல்லவாடு உள்ளிட்ட 50 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள், 1000 கட்டு மரங்கள், 1000 விசைப்படகுகள் ஆகியவை கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கடல் சீற்றம் இல்லாத காலங்களில் அனைத்து படகுகளிலும் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றால் கடலூருக்கு50 டன்முதல் 100 டன் வரை மீன் வரத்து இருக்கும். சாதாரண நாட்களில் 10 முதல் 20 டன் வரை மீன் கிடைக்கும். தற்போது கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் 50 டன் மீன் வரத்து குறைந்துள்ளது. எனவே கேரளாவுக்கு மீன் ஏற்றுமதி செய்யப்படவில்லை. மார்க்கெட்டிலும் குறைந்த அளவு மீன்களே விற்பனை செய்யப்பட்டன.

Similar News