செய்திகள்

மதுராந்தகம் அருகே லாரிகள் மோதல்: 2 பேர் பலி

Published On 2016-11-30 22:44 IST   |   Update On 2016-11-30 22:44:00 IST
மதுராந்தகம் அருகே நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது கன்டெய்னர் லாரி மோதியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மதுராந்தகம்:

சென்னை புதுவண்ணாரபேட்டையை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 32). கன்டெய்னர் லாரி டிரைவர். லாரி கிளீனராக காஞ்சீபுரம் மாவட்டம் சூனாம்பேட்டை அடுத்த வில்லியம்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேசன் (45) இருந்தார். இவர் ராஜ்குமாரின் தாய்மாமன் ஆவார். இவர்கள் இருவரும் கன்டெய்னர் லாரியில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு சென்னை திரும்பினர்.

மதுராந்தகத்தை அடுத்த படாளம் கூட்டுசாலையில் வரும்போது சாலை ஓரம் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது கன்டெய்னர் லாரி மோதியது.

இதில் படுகாயம் அடைந்த ராஜ்குமார், வெங்கடேசன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த படாளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்தர்குமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ராஜ்குமாரின் சகோதரர் தங்கராஜ் படாளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News