செய்திகள்

திருச்சியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் மீது வழக்கு

Published On 2016-11-29 10:43 GMT   |   Update On 2016-11-29 10:43 GMT
திருச்சியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 4 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்சி:

மத்தியில் ஆளுகின்ற பாரதிய ஜனதா அரசு உரிய முறையில் திட்டமிடாமலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமலும் திடீர் என்று இந்திய ரூபாய்கள் 1,000 மற்றும் 500 செல்லாது என அறிவித்தது.

இதனால் ஏழை, எளிய மக்கள், கூலி வேலைக்கு செல்பவர்கள், வணிகர்கள், மாணவர்கள், தாய்மார்கள் என அனைவரும் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு வங்கிகளின் வாசல்களில் பணம் பரிமாற்றத்திற்காக காத்திருக்க கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த அவல நிலைக்கு காரணமான மத்திய அரசின் மக்கள் விரோத போக்கினை கண்டித்தும், மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களையும், துயரங்களையும் நீக்க உடனடியாக தக்க நடவடிக்கைகள் எடுக்க பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியும் நேற்று திருச்சி மரக்கடையில் அமைந்துள்ள பாஸ்போர்ட் தலைமை அலுவலகம் எதிரில் வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாபெரும் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமை தாங்கினார். இதில் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், எம்.எல்.ஏ.க்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சவுந்திரபாண்டியன், ஸ்டாலின் குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். கூட்டணி கட்சியான காங்கிரசும் பங்கேற்றது.

இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஆனால் அனுமதியை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக எம்.எல்.ஏ.க்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சவுந்திர பாண்டியன், ஸ்டாலின் குமார் மற்றும் நிர்வாகிகள் உள்பட 10 பேர் மீது காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Similar News