செய்திகள்

3 பேர் கொலை: கண்ணகி நகர் பகுதியில் ரவுடிகள் கணக்கெடுப்பு

Published On 2016-11-01 14:55 IST   |   Update On 2016-11-01 14:55:00 IST
துரைப்பாக்கம் கண்ணகி நகரில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட மோதலில் 3 பேர் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் வீடு வீடாக சென்று விசாரித்து வருகிறார்கள்.
திருவான்மியூர்:

துரைப்பாக்கம் கண்ணகி நகரில் கடந்த 29-ந்தேதி இரவு கஞ்சா விற்பதில் 2 கோஷ்டிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் அதே பகுதியை சேர்ந்த களியா என்ற ரஞ்சித் குமார், சக்திவேல் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். தாக்குதலில் தப்பி ஓடிய போது மாடியில் இருந்து விழுந்து ஜெபஸ்டின் மில்லர் பலியானார். பலத்த காயம் அடைந்த செங்கோட்டையனுக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது தொடர்பாக கண்ணகி நகரை சேர்ந்த மணிமாறன், தமிழரசன், அற்புதராஜ் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் மோதலில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

கொலைகளுக்கு கஞ்சா விற்பதில் ஏற்பட்ட மோதலே முக்கிய காரணமாக உள்ளது. இதையடுத்து கஞ்சா வியாபாரிகள் பற்றிய விவரத்தை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

மேலும் கண்ணகி நகரில் உள்ள ரவுடிகள் பட்டியலையும் சேகரித்து உள்ளனர். இது பற்றி போலீசார் வீடு வீடாக சென்று விசாரித்து வருகிறார்கள்.

கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் பலர் இன்னும் சிக்கவில்லை. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News