செய்திகள்
அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்த படம்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள்-ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2016-11-01 10:45 IST   |   Update On 2016-11-01 10:45:00 IST
சம்பளம் வழங்காததை கண்டித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள்-ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக் கழகத்தை கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு ஏற்றது.

பல்கலைக்கழகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் வழங்க ரூ.52 கோடி தேவைப்படும்.

பொதுவாக சம்பளத்தை ஊழியர்களின் வங்கி கணக்கில் மாத கடைசி நாளில் செலுத்துவார்கள். ஆனால் இதுவரை வங்கி கணக்கில் அக்டோபர் மாத சம்பளம் வழங்கப்படவில்லை.

நிதி நெருக்கடி காரணமாக சம்பளத்தை அடுத்த  மாதம் முதல் வாரத்தில் வழங்குவதாக பல்கலை கழக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலை பல்கலைக்கழக அனைத்து ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஊழியர் சங்க அலுவலகத்தில் நேற்று பொதுக் குழுகூட்டம் நடந்தது. அவர்கள் வகுப்பை புறக்கணித்துவிட்டு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பின்னர் ஊழியர்கள் அனைவரும் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) சந்திரசேகரனை அவரது அலுவலகத்தில் வைத்து முற்றுகையிட்டனர்.

ஊழியர்களிடம் சந்திரசேகரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சுமூக முடிவு ஏற்படவில்லை. இதையடுத்து பல்கலைக் கழக அனைத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று மாலை ஆசிரியர்கள், ஊழியர்கள் அண்ணாமலை நகர் பூமா கோவில் அருகே திரண்டனர். அவர்கள் சம்பளம் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழக அரசு, மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழக நிர்வாகத்தை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர்.

சம்பளம் வழங்காததை கண்டித்து இன்று காலை மீண்டும் போராட்டம் நடைபெறும் என அனைத்து ஊழியர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Similar News