செய்திகள்

அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டிய மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்வதா?: திருநாவுக்கரசர் கண்டனம்

Published On 2016-10-27 11:59 IST   |   Update On 2016-10-27 11:59:00 IST
அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டிய மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்ததற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர்:

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் பங்கேற்றேன்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மத்திய-மாநில அரசுகள் ஒரு மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்போம்.

மு.க.ஸ்டாலின் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பது என்பது அந்தந்த கட்சிகளின் தனிப்பட்ட விருப்பம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது அனைத்து கட்சிகளின் விருப்பம் என்றால் இந்த கூட்டத்தை ஏன் விமர்சிக்க வேண்டும்.

அனைத்து கட்சி கூட்டத்தில் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை. இதனை விமர்சிக்க வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News