செய்திகள்

டெல்லிக்கு மாற்ற எதிர்ப்பு: சிப்பெட் தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்- தா.பாண்டியன் பங்கேற்பு

Published On 2016-10-25 15:12 IST   |   Update On 2016-10-25 15:12:00 IST
சிப்பெட் நிறுவனத்தை டெல்லிக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் சிப்பெட் நிறுவனத்தின் ஊழியர்கள் ஐக்கிய கூட்டமைப்பு சார்பில் அதன் வளாகத்தில் ஒரு நாள் அடையாள தர்ணா போராட்டம் நடைபெற்றது.
ஆலந்தூர்:

கிண்டியில் மத்திய அரசின் நிறுவனமான ‘சிப்பெட்’ இயங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தை டெல்லிக்கு மாற்ற போவதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இடம் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் சிப்பெட் நிறுவனத்தின் ஊழியர்கள் ஐக்கிய கூட்டமைப்பு சார்பில் அதன் வளாகத்தில் ஒரு நாள் அடையாள தர்ணா போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். போராட்டத்தை இந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

சிப்பெட் நிறுவனம் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.250 கோடி லாபம் ஈட்டி உள்ளது. எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்ற முடிவை கைவிட வேண்டும். தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்க கூடாது. தமிழகத்தில் பா.ஜ.க. வெற்றி பெற முடியாது என்று கூறினார்.

இது தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் பால கிருஷ்ணன் கூறியதாவது:-

நான் சிப்பெட் நிறுவனத்தை டெல்லிக்கு மாற்ற கூடாது என்று மத்திய அரசிடம் மனு கொடுத்து உள்ளேன். அதை பரிசீலிக்கவில்லை. மத்திய மந்திரி ஆனந்தகுமார் எங்களை சந்திக்க முடியாது என்று கூறி விட்டார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த போராட்டத்தில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன், பொதுச்செயலாளர் வெங்கட் ரமணா, சங்க நிர்வாகிகள், மாணவர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை கிண்டி போலீசார் செய்து இருந்தனர்.

Similar News