செய்திகள்

தே.மு.தி.க. நிர்வாகி வீட்டில் குண்டுவீச்சு: அ.தி.மு.க. பிரமுகரின் மகன் கைது

Published On 2016-10-23 16:20 IST   |   Update On 2016-10-23 16:20:00 IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே தே.மு.தி.க. நிர்வாகி வீட்டில் குண்டுவீசிய அ.தி.மு.க. பிரமுகர் மகனை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூர் தண்டலத்தை சேர்ந்தவர் சசிகுமார். தே.மு.தி.க. ஒன்றிய நிர்வாகி. இவர் தண்டலம் ஊராட்சிமன்ற துணைத்தலைவராக இருந்தார்.

உள்ளாட்சி மன்ற தேர்தலில் தண்டலம் ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட கடந்த மாதம் 30-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வீட்டில் இருந்து புறப்பட்டார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் சசிகுமார் வீட்டில் வெடிகுண்டு வீசியதில் ஜன்னல் கண்ணாடிகள், கார் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன.

இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. ஒன்றிய அவைத்தலைவர் குமார் என்பவரின் மகன் பாஸ்கர் மீது போலீசார் சந்தேகம் அடைந்து அவரை பிடித்து விசாரித்தனர்.

என்னுடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் 3 முறை தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளனர். இந்த தேர்தலில் நான் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். அதில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன்.

சசிகுமார் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது தெரியவந்தது. எனவே அவரை மிரட்டுவதற்காக என் நண்பர்களை வைத்து நாட்டு வெடிகுண்டுகளை அவர் வீட்டில் வீச வைத்தேன். பயந்து போய் அவர் வேட்புமனு தாக்கல் செய்யமாட்டர் என நினைத்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து பாஸ்கரை போலீசார் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய அவரது நண்பர்கள் 2 பேரை தேடி வருகிறார்கள்.

Similar News