செய்திகள்

ஆதம்பாக்கத்தில் லாரி மோதி எலக்ட்ரீசியன் பலி: பொதுமக்கள் மறியல்

Published On 2016-10-22 14:13 IST   |   Update On 2016-10-22 14:13:00 IST
லாரி மோதி எலக்ட்ரீசியன் பலி. இதனை கண்டு ஆவேசம் அடைந்த அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். அவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

ஆலந்தூர்:

பள்ளிக்கரணையை சேர்ந்தவர் மோகன் (வயது 40). எலக்ட்ரீசியன். இன்று காலை ஆதம்பாக்கத்திற்கு பணிக்கு சென்றார்.

கக்கன் நகர் மெயின் ரோட்டை கடக்க முயன்ற போது கிண்டி நோக்கி சென்ற டிப்பர் லாரி திடீரென மோகன் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்ததும் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

இதனை கண்டு ஆவேசம் அடைந்த அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். அவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆதம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சு நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறும்போது, “சாலை ஓரத்தில் குடிநீர் பணிக்காக போடப்பட்ட ராட்சத குழாயால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனை அப்புறப்படுத்த வேண்டும். வேகத்தடை அமைக்க வேண்டும்” என்றனர்.

இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News